சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 16ம் தேதி வரை வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மலையோர மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மாலை நேரங்களில் லேசான மழை மட்டுமே பெய்தது. எனினும் மற்ற நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 18ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 7 டிகிரி பாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக் கூடும் என்பதால் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
