சிவகாசியில் போலீசார் அதிரடி: கஞ்சா விற்ற 7 பேர் கைது

சிவகாசி, ஜூலை 13: சிவகாசி உட்கோட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக ஒடிசாவில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா சிவகாசியில் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் டிஎஸ்பி அனில்குமார் ஆலோசனையின் பேரில், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கவிதா நகர் பகுதியில் டவுன் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிவசக்தி நகரை சேர்ந்த வைரமுத்து மகன் முத்துக்கிருஷ்ணன் (19) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சாவை விற்பனை ெசய்யும்படி அவரிடம் கொடுத்த நாரணாபுரம் ரோடு முனீஸ்வரன் காலனியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று சிவகாசி கிழக்கு பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருத்தங்கலை சேர்ந்த சுரேஷ் மகன் சுதாகர் (58), மாரீஸ்வரன் (23), ரஞ்சித்குமார் (32), சுதர்சன் (20), தங்கேஸ்வரன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதலானது.

Related Stories: