உஸ்பெகிஸ்தானில் கொலையான மருத்துவ மாணவி உடல் கேரளாவில் தகனம்

 

திருவனந்தபுரம்: மதம் மாற கட்டாயப்படுத்தி மலப்புரத்தைச் சேர்ந்த சக மாணவனால் உஸ்பெகிஸ்தானில் வைத்து கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட ஆலப்புழா மருத்துவ மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நேற்று சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர்கள் பசந்த், மினி தம்பதி. அவர்களது மகள் சாவர்யா (21). உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். அவருடன் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருல் அனாம் (21) என்ற மாணவனும் படித்து வந்தார். இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தனர்.

மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஒரே விடுதியில் தான் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கடந்த 3ம் தேதி சாவர்யாவை சாதருல் அனாம் லேப்டாப்பால் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சாவர்யாவின் உறவினர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு விரைந்தனர். விசாரணையில் சாவர்யாவை மதம் மாற கட்டாயப்படுத்தி சாதருல் அனாம் அடித்துக் கொன்றதாக தெரியவந்தது. அவரை உஸ்பெகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சாவர்யாவின் உடல் உஸ்பெகிஸ்தானில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு நேற்று விமானம் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு கொண்டு வரப்பட்டது.

உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு நேற்று மாலை 6 மணியளவில் சாவர்யாவின் உடல் வீட்டுத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய அண்ணன் சாவந்த் சிதைக்கு தீ மூட்டினார். சாதருல் அனாமுக்கு எதிராக ஹரிப்பாடு போலீசில் சாவர்யாவின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Related Stories: