இங்கிலாந்துடன் இன்று 4வது டி20 இந்தியாவுக்கு கடும் நெருக்கடி

பிரிஸ்டல்: ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி20 அணி, முதலில் அயர்லாந்து அணியுடன் விளையாடிய தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. அடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்திவருகிறது. முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது டி20ல் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடந்த 3வது போட்டியிலும் அந்த அணி 125 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த அப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச… இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. தொடக்க வீரர் சால்ட் அதிகபட்சமாக 70 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். பட்லர் 36, கேப்டன் புரூக் 16, ஜாக்ஸ் 14, பெத்தெல் 13 ரன் எடுத்தனர்.சாம் கரன் 41 ரன் (24 பந்து, 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 11.4 ஓவரிலேயே வெறும் 76 ரன்னுக்கு சுருண்டு 125 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 4வது போட்டியில் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து வரிந்துகட்டுகிறது. அதே சமயம், தொடர்ச்சியாக 2 டி20 தொடரில் தோல்வி என்ற அவப்பெயரை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் நடப்பு உலக சாம்பியனான இந்தியா சிக்கியுள்ளது.

Related Stories: