வந்தவாசி, ஜூலை 8: வந்தவாசி அருகே பட்டப்பகலில் அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன், ரூ.1.50 லட்சம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(38) அரசு பேருந்து டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி(32) செய்யாறு சிப்காட் ஊழியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று வழக்கம்போல் ஏழுமலை வேலைக்கும் அதே போல் ஜெயந்தி சிப்காட்டிற்கும் சென்றுள்ளார். மகன்கள் பள்ளிக்கு சென்றிட வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ள நிலையில் பட்ட பகலில் மர்ம ஆசாமிகள் வீட்டின் முன் பக்கம் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது.
வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் ஜெயந்திக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக ஜெயந்தி வந்து பார்த்தார். அப்போது நகை, பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசன் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பட்டப் பகலில் நகை பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
