திருவண்ணாமலை- தண்டராம்பட்டு தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: தொழிலாளர்கள் அதிர்ச்சி

 

தண்டராம்பட்டு, ஜூன் 29: திருவண்ணாமலை- தண்டராம்பட்டு தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து தினசரி ஏராளமான தொழிலாளர்கள் திருவண்ணாமலையில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இதற்காக தண்டராம்பட்டில் இருந்து நல்லவன்பாளையம், செட்டிபட்டு, மெய்யூர், நாச்சானந்தல், வரகூர், காம்பட்டு வரையிலான தனியார் பஸ்களில் ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் திருவண்ணாமலை- தண்டராம்பட்டு தனியார் பஸ்களில் ரூ.15 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலையில் இருந்து சிறுபாக்கம், ராதாபுரம், தண்டராம்பட்டு வரை வரும் தனியார் பஸ்களில் கூடுதலாக ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஸ் கண்டக்டரிடம் பயணிகள் கேட்டதற்கு, `டீசல் விலை உயர்வால் எங்களது முதலாளிகள் சொன்னதன்பேரில் ரூ.5 கட்டணம் உயர்த்தியுள்ளோம்’ என தெரிவித்தனர். இதனால் கூலித்தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனாலும் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. ஆனால் தற்ேபாது ஆட்சி மாறிய நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் பஸ்களில் 5 ரூபாய் கட்டணம் உயர்த்தியுள்ளனர். எங்களை போன்று பலர் தினமும் திருவண்ணாமலையில் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். பஸ் கட்டண உயர்வால் தினசரி கூடுதலாக ரூ.10 செலவிடவேண்டியுள்ளது.

கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் அளித்து வந்தனர். அந்த திட்டம் தற்போது தொடர்ந்தாலும் போதிய எண்ணிக்கையில் இலவச பஸ்கள் வருவதில்லை. இதனால் தனியார் பஸ்சில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் எங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது’ இவ்வாறு தெரிவித்தனர்.

 

Related Stories: