உலகக் கோப்பை கனவு முடிவு: கண்ணீருடன் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் ஒரு கோல் கூட எதிரணிக்கு தராமல் ஸ்பெயின் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் இத்தாலி (1990) மற்றும் சுவிட்சர்லாந்து (2006-10) அணிகள் தலா 5 போட்டிகளில் கோல் தராமல் இருந்ததே சாதனையாக இருந்தது.

அதேபோல், ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் உனாய் சிமோன், எதிரணியினரை 609 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் இத்தாலியின் புகழ்பெற்ற கோல்கீப்பர் வால்டர் ஜெங்கா 1990-ல் படைத்த 517 நிமிட சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த இரண்டு கோல் வாய்ப்புகளை உனாய் சிமோன் மிக லாவகமாகப் பாய்ந்து தடுத்து நிறுத்தினார். இந்த அதிரடி வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி உலகக் கோப்பை தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் முடிவில் போர்ச்சுகல் அணி வெளியேறியதால், உலகக் கோப்பையின் ஆகச்சிறந்த லெஜண்டான ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இத்துடன் அவரது உலகக் கோப்பை பயணம் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது.

Related Stories: