நாகப்பட்டினம், ஜூலை 6: நாகப்பட்டினத்தில் பொன்னி சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையம் மற்றும் பொன்னி கலையகத்தில் நடந்து வரும் ஓவியப்பயிற்சி மற்றும் இசை வாத்தியங்கள், சிலம்பு கலை, பரதநாட்டியம் ஆகிய பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.நாகப்பட்டினத்தில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ் பொன்னி சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையம் மற்றும் பொன்னி கலையகத்தில் ஓவியப்பயிற்சி, இசை வாத்தியங்கள், சிலம்பு கலை, பரதநாட்டியம் ஆகிய பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் 41 மாணவர்கள் ஓவியப்பயிற்சி பெற்று வருகிறனர்.
பயிற்சி பெற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். மேலும் 6 மாத கால ஓவியப்பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பொன்னி கலையகத்தில் கிட்டார், வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், சிலம்பம், நாட்டுப்புற கலை உள்ளிட்ட 30 வகையான கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டார். கலெக்டருடன் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
