பேரணாம்பட்டு, ஜூலை 8: பேரணாம்பட்டு அருகே நிலத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா கிராமத்தை சேர்ந்தவர் வேலு (70). இவருக்கு தசரதன், முத்து, தர்மன், வெங்கடேசன் ஆகிய 4 தம்பிகள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் அவர்களின் பூர்வீக விவசாயம் நிலம் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. அதனை ஐந்து பேரும் பிரித்து தனித்தனியாக விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும், விவசாயம் செய்ய அந்த நிலத்திற்கு ஒரே கிணறு என்பதால் அதிலிருந்து 5 பேரும் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கிணற்றில் சர்வீஸ் போர் தனியாக போட்டு தண்ணீர் பாய்ச்சிக் கொள்வதாக அண்ணன் வேலுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு வேலு கிணறு யாருக்கும் சொந்தமில்லை பொதுவாக உள்ளது யாரும் சர்வீஸ் லைன் இழுத்து போர் போட கூடாது என்று கூறியதால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி வேலுவுக்கும் அவருடைய தம்பி முத்து (55), மற்ெறாரு தம்பி வெங்கடேசன் மனைவி சரிதா (38), அவரது மகன் ஜெகன் குமார் (19) ஆகிய நான்கு பேருக்கும் மீண்டும் நிலத்தில் தண்ணீர் எடுக்கும் போது பிரச்னை ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.
அப்போது, வேலுவை தம்பி முத்து, சரிதா, ஜெகன்குமார் ஆகியோர் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் பலத்த காயமடைந்த வேலு மயங்கி விழுந்துள்ளார். இதனையறிந்த மற்றொரு தம்பி தசரதன் மற்றும் வேலுவின் மகன் சுரேஷ் அவரை மீட்டு பேரணாம்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும், அன்று இரவே வேலுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் வேலுவை பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுரேஷ் ெகாடுத்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தார். கடந்த 1ம் தேதி முத்து (55), சரிதா மகன் ஜெகன் குமார் (19), ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, நேற்று சரிதா உட்பட மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிந்து தலைமறைவான சரிதாவை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
