பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10 அடுக்குமாடிகளைக் கொண்ட இக்குடியிருப்பில் 80 வீடுகளில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீயின் தீவிரம் மற்றும் அடர்ந்த புகை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட போதிலும், ட்ரோன் உள்ளிட்ட நவீன உபகரணங்களை பயன்படுத்தி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மூச்சு திணறல் மற்றும் தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
