மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது

 

தஞ்சாவூர், ஜூலை 1: தஞ்சையில் நேற்று நடைபெற்ற மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது வழங்கப்பட்டது. தஞ்சையில் நேற்று மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது . மாவட்டத் தலைவர் தென்னை விஞ்ஞானி செல்வம் தலைமை தாங்கினார். சங்க நிறுவனர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். பொதுச்செயலாளர் பாஸ்கரன் கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்டிமுத்து வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பாரதிமோகன் பங்கேற்றார்.

இந்த விழாவில் ‘மக்கள் காவலில் மாவீரர்’ என்ற விருது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தத்திற்கும், ‘மனிதாபிமான மக்கள் காவலர்’ என்ற விருது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணனுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில், தஞ்சை நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள புற நகரங்களில் வீடுகட்டும் மனைகளை வாங்குவோரில் சிலர் வாங்கிய மனைகளை லாபத்திற்கு விற்கலாம் என்று பல ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் போட்டு வைப்பதால் அந்த மனைகளில் புதர்கள், மரம், செடி கொடிகள் மண்டி உள்ளது.இதனால் அக்கம்பக்கம் வீடு கட்டுவோருக்கும், குடியிருப்போருக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது .

எனவே வீட்டு வளர்ச்சித் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இதனை கண்காணித்து ஆண்டுக்கு ஒரு முறை அந்த மனையை உடைமைதாரர்கள் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேல் அந்த மனைகளை சுத்தம் செய்யாது போனால் அதனை அரசு கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். அந்த குப்பைகளை நாள்தோறும் சேகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் இணை செயலாளர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.

Related Stories: