திருவனந்தபுரம்: கேரளாவில் அபிநவ் சுந்தர் நாயக்கின் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி ‘மோலிவுட் டைம்ஸ்’ என்ற மலையாளப் படம் வெளியானது. ஆஷிக் உஸ்மான் என்பவர் தயாரித்த இந்தப் படம் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சில ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கியிருந்தது. ஆனால் நீக்கப்பட்ட இந்தக் காட்சிகளும், வசனங்களும் படத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள சென்சார் போர்டு சார்பில் திருவனந்தபுரம் திருவல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் மற்றும் டைரக்டர் அபிநவ் சுந்தர் நாயக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் வரை சிறையோ, ரூ.1 லட்சம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
