போபால்: 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்தியப் பிரதேசம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இந்தூர் வந்தடைந்த திரவுபதி முர்முவை, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்கு பாய் படேல் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். முதலில் பேதுல் நகருக்கும் செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர் இன்று மாலை புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் மற்றும் அமலேஷ்வர் கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.
இதனையடுத்து நாளை மாலை ஜபல்பூர் செல்லும் குடியரசுத்தலைவர், 21ஆம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும், ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். 22ஆம் தேதி குனோ தேசியப் பூங்காவைப் பார்வையிட்டுவிட்டு, பின்னர் டெல்லி திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
