திருவனந்தபுரம்: கேரளாவின் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதில், கடந்த ஜனவரியில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அர்ஜாவ் (வயது 7) என்ற சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் டயோரியா பாதிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அந்த சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அர்ஜாவ் பலியானான்.
இந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ஷிகெல்லா தொற்றினால் மரணம் அடைந்துள்ளார். இதனை மாநில சுகாதார துறை இன்று தெரிவித்து உள்ளது. இதனால், கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த ஷிகெல்லா தொற்று ஏற்பட்டால், டயோரியா, காய்ச்சல் மற்றும் வயிற்று பிடிப்பால் வலி போன்றவை ஏற்படும். கெட்டுப்போன உணவு அல்லது தண்ணீர் மற்றும் தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து இந்த வியாதி பரவும். அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு ஷிகெல்லா பதிப்படைத்துள்ளனர். திருச்சூர் மற்றும் கண்ணூரில் தொற்று வேகமாக பரவிவருகிறது.
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 146 ஷிகெல்லா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 70 பேருக்கு கடந்த ஜூனில் தொற்று உறுதியாகி உள்ளது என கூறினார். இது மொத்த பாதிப்பில் 50 சதவீதம் ஆகும். இதனால், நடப்பு மாதத்தில் இந்த பாதிப்பு மளமளவென அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
