ஆம்னி பஸ்சில் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம். இவ்வாறு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வெளியூர்களில் பணிபுரிவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்தவும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தடையை நீக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: