வாலிபரை தாக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது: போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கால் முறிவு

 

நெய்வேலி, ஜூன் 15: கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 30 பழைய சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜன்(28). இவர் வட்டம் 30 பகுதியில் உள்ள குணசேகரன் மகன் நடராஜன் (எ) ஐயப்பன்(35), அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன்(36), நெய்வேலி காட்டுகொல்லையை சேர்ந்த சுந்தர் மகன் சுரேஷ்(28) ஆகியோருடன் நெய்வேலி வட்டம் 30 பழைய சந்தை அருகில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜனை, 3 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வட்டம் 29 என்எல்சி குடியிருப்பு பகுதியில் 3 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து அங்கு சென்றபோது, போலீசார் வருவதை பார்த்து அங்கு பதுக்கியிருந்த 3 பேரும் தப்பிக்க முயன்றனர். அப்போது 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்க என்எல்சி வீட்டின் மாடியில் இருந்து குதித்தபோது, ஜயப்பனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.இதையடுத்து போலீசார், ஜயப்பனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் நடராஜன் (எ) ஐயப்பன் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதும், மேலும் இவர் மீது அண்ணாமலை நகர், செங்கல்பட்டு, சிதம்பரம் நகர காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, சாராய வழக்கு என 26 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: