புதுச்சேரி, ஜூன் 13: பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கொலை வழக்கு ரவுடிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உறுவையாறு செல்வா நகரை சேர்ந்த ராசு மகன் முருகன் (எ) பட்டா முருகன் (24). பிரபல ரவுடியான இவர் மீது ஒரு கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. மங்கலம் காவல் நிலையத்தில் குற்றப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருப்பவர். இந்நிலையில் கடந்த 2022ல் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை காதல் என்ற போர்வையில் முருகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இது குறித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார், போக்சோ (6) சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ரவுடி முருகனை கைது செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுமதி விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார். போக்சோ வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவுடி முருகன், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
