ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், காவல்கிணறு, ராதாபுரம், வடக்கன்குளம், புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூ மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகைப்பூ கொண்டு வரப்படுகிறது.
மேலும் பெங்களூரு, ஓசூர், ராயக்கோட்டை, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரந்தி, பட்டர் ரோஸ் மற்றும் தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்குறுங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசியும், செண்பகராமன் புதூர், தோவாளை, மருங்கூர், ராஜாவூர் ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழி கொண்டை உள்ளிட்ட பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
இதனால் பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதன்படி பிச்சிப்பூ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகிறது. மற்ற பூக்கள் விலை விவரம். மல்லிகை ரூ.1000, சேலம் அரளி ரூ.150, உள்ளூர் அரளி ரூ.100, சம்பங்கி ரூ.150, கிரேந்தி ரூ.100, மஞ்சள் கிரேந்தி ரூ.100, ரோஜா பாக்கெட்டு ரூ.30 பட்டர் ரோஸ் ரூ.150, கோழி கொண்டை ரூ.150, கொழுந்து ரூ.150, மரிக்கொழுந்து ரூ.150 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
