திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு தீவிர சோதனை செய்தனர். அங்கு பாக்கெட், பாக்கெட்டாக ஹான்ஸ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 கிலோ எடையிலான 104 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணையில், ஸ்ரீரங்கம் பகுதி காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நடராஜன் (எ) பாதயாத்திரை நடராஜன் (65) விற்பனைக்காக புகையிலை பொருட்களை கட்சி அலுவலகத்திலேயே பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் விஜய் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தவெகவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலேயே புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
