சென்னை: இன்று காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள நினைவிடத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், மலர் வளையம் வைத்து வணங்கினர். இதன்போது திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார் . பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளார்.
காயிதே மில்லத் பற்றி குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இஸ்லாமியர்களுடைய கல்விக்கு மிக முக்கியமான பணியாற்றியவர். உயர்ந்த பண்பின் காரணமாக இறுதிவரை போற்றி புகழப்பட்டார். 1946 முதல் 1952 வரை சென்னை மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக அவர் இருந்திருக்கிறார்.
