மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்: கலைஞர் பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம் என கலைஞர் பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக – தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!

என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.

எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம். மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: