மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாக் குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (50). மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இளங்கோவன் தனது தாய் ராஜம்மாளுடன் தனியாக வசித்து வந்தார். ராஜம்மாள் கடந்த வாரம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த 3 தினங்களாக இளங்கோவனின் தாயும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அவரது அக்காவும் இளங்கோவனின்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது அக்கா மகன் கணபதி என்பவர் நேற்று மாலை இளங்கோவனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் ஒரு பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடையந்த அவர் உறவினர்கள் மற்றொரு பக்கம் திறந்து கிடந்த கதவு வழியாக வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த ஷோபாவில் உடல் உருமாறி அழுகிய நிலையில் இளங்கோவன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* போலீஸ் அலட்சியம் காரணமா?
கடந்த 3 மாத்திற்கு முன்பு இளங்கோவன் பைக்கில் வந்தபோது, அப்பகுதியில் நெகனூர் ஏரிக்கரையோரம் ஒரு கும்பல் அவரை வழிமறித்து சராமாரியாக வெட்டியுள்ளது. எனினும் இளங்கோவன் படுகாயங்களுடன் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இளங்கோவன் அப்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இச்சம்பவம் நடத்திருக்காது என இளங்கோவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
