தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான K.S. மகேந்திரன் அவர்கள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சோதனைகளை வென்று சாதனைகள் பலவற்றை படைத்த மாபெரும் பேரியக்கம் ஆகும். ஆகவே, கழக உடன்பிறப்புகள் யாரும் இத்தகைய விரும்பத்தகாத, மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புத் தம்பி மகேந்திரன் அவர்களை இழந்து மிகுந்த மனவேதனையில் வாடும் அவரது மனைவி திருமதி முனீஸ்வரி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மகேந்திரன் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

மகேந்திரன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 30 லட்சம் ரூபாயும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், மகேந்திரன் அவர்களுடைய ஒரு வயது பெண் குழந்தை தேஸ்னா, பள்ளிக் கல்வி தொடங்குவது முதல் உயர் கல்வி முடிக்கும் வரை அனைத்து கல்வி செலவுகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Related Stories: