புதுடெல்லி: சிபிஎஸ்இயின் டிஜிட்டல் வழி மதிப்பீடு முறையான ஓஎஸ்எம் குளறுபடியை தொடர்ந்து இன்னும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் நீடிப்பதும், அவரை பிரதமர் மோடி பாதுகாப்பதும் அவமானகரமானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் எனும் ஓஎஸ்எம் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் மதிப்பெண் குறைந்தது, விடைத்தாள் மாறியது உட்பட மாணவர்கள் தரப்பில் பல்வேறு புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஊடக அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஓஎஸ்எம் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மண்டல அலுவலகங்கள் தோறும் மாதிரி திட்டங்களை நடத்தப் பார்க்க வேண்டும் என சிபிஎஸ்இயின் சொந்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அளித்த ஆலோசனையை சிபிஎஸ்இ நிர்வாகம் புறக்கணித்து விட்டது என்பதை ஊடக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. அந்த ஆலோசனையை கேட்டிருந்தால் இன்று லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஏற்பட்ட தேவையற் சிரமத்தை தடுத்திருக்க முடியும்.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆணவமும், அறிவுசார் ஆலோசனைகளை ஏற்க மறுக்கும் போக்கும் ஆச்சரியமளிப்பவை அல்ல. இத்தகைய அமைச்சர் இன்னமும் கல்வி அமைச்சர் பதவியில் நீடிக்கும் பிடிவாதமும், பிரதமர் மோடி அவரை பாதுகாப்பதும் அவமானகரமானது. அந்த அமைச்சரும், அமைச்சகமும் திறமையற்றவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களாகவும் மாணவர் நலனில் அக்கறையற்றவர்களாகவும் இருப்பது தற்போது முழுமையாக அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நீதி விசாரணை: ராகுல் வலியுறுத்தல்
ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில், ‘‘சிபிஎஸ்இயின் ஓஎஸ்எம் செயல்முறையை கையாண்ட ‘COEMPT’ நிறுவனம் இதற்கு முன்பு ‘Globarena’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் இதற்கு முன் தெலங்கானாவில் 2019, 2023ல் இதே போன்ற மோசடியை அரங்கேற்றி உள்ளது. தெலங்கானா வாரிய தேர்வின் போது ஓஎஸ்எம் தொடர்பான பிழைகள் காரணமாக 23 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இவை அனைத்தும் பொதுவெளியில் கிடைக்கக் கூடிய தகவல்கள். இதை கண்டுபிடிக்க எங்களுக்கு வெறும் 30 நொடிகள் மட்டுமே ஆனது.
ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகம் எதற்காக இத்தகைய பின்னணி கொண்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இதன் பின்னணி குறித்து சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எங்கள் ஜென்-ஸி நண்பர்களின் கடின உழைப்பின் பலன்களையோ, எதிர்காலத்தையோ யாராலும் திருட முடியாது. இந்த சதித்திட்டத்தின் ஆழம் வரை சென்று இந்த ஊழலை அடியோடு ஒழிப்போம்’’ என கூறி உள்ளார். நீட் மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்கொலை செய்த ராஜஸ்தான் மாணவனின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேற்று சந்தித்தார்.
