ராசிபுரம், மே 23: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ரகுபிரசாத்(36). வருகிறார். இவரது அத்தை மகன் விஷால் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது நண்பர் லோகசூர்யாவை(25) பார்ப்பதற்காக விஷால் சென்றுள்ளார். அப்ேபாது, ரகுபிரசாத் அவரை தடுத்து நிறுத்தி, லோகசூர்யா குற்றவாளி வழக்கில் சம்பந்தப்பட்டு சிறைக்கு சென்றதாக கூறி, அவருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதனை விஷால், லோகசூர்யாவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லோகசூர்யா, ரகுபிரசாத்தை நேரில் அழைத்து, ஏன் என்னை பற்றி அவதூறாக பேசி வருகிறாய் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே லோகசூர்யா, ரகுபிரசாத்தை சரமாரியாக தாக்கியதுடன், அவரது டூவீலரை எடுத்து சென்றார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது லோகசூர்யா, திடீரென ரகுபிரசாத்தின் டூவீலரை தீவைத்து எரித்து விட்டார். இதனிடையே லோகசூர்யா டூவீலரை தீவைத்து எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதுகுறித்து ரகுப்பிரசாத், ராசிபுரம் காவல் நிலையத்தில் வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த லோகசூர்யாவை, 10 நாட்களுக்கு பிறகு நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
