நாமக்கல், மே 23: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் குற்றங்களில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க குற்றவாளிகள் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 8 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த 7 பேர், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 12 குற்றவாளிகள் என மொத்தம் 27 குற்றவாளிகள், கடந்த 3 நாட்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன், கடந்த 3 நாட்களில் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், போதை பொருள் மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட எஸ்பி விமலா தெரிவித்துள்ளார்.
