நாமகிரிப்பேட்டை, மே 19: வெண்ணந்தூர் அடுத்த கட்டனாச்சம்பட்டி ஏரியில், இரவு நேரங்களில் மர்ம கும்பல் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெண்ணந்தூர் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டி ஏரி அப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது. இந்த ஏரியில் இருந்து, சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில், டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் மண் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து மண் திருட்டு நடைபெறுவதால், மழைக்காலத்தில் ஏரியில் நீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வருவாய்துறை மற்றும் போலீசார் இணைந்து, தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, ஏரியில் மண் திருடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
