சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் 112வது புதிய கமிஷனராக ஏடிஜிபி அமல்ராஜ் இன்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சென்னையின் 112வது போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி அமல்ராஜை நேற்று உள்துறை செயலாளர் மணிவாசன் நியமித்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு ஏடிஜிபி அமல்ராஜ் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை அலுவலகத்திற்கு வந்தார். பதவியேற்புக்கான எற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.
அப்போது போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து கமிஷனர் அமல்ராஜை வரவேற்றனர். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் புதிய கமிஷனருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கமிஷனர், பின்னர் 8வது மாடியில் உள்ள போலீஸ் கமிஷனர் அறைக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். பின்னர் 112வது சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் கோப்புகளில் தனது கையெழுத்து போட்டு முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். அதைதொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் துறை சார்ந்த காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
