காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் மணிராஜா (29). இவர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர். குன்றக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடந்தாண்டு 3 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம் கடன் பெற்றுள்ளார். கடந்த 12ம் தேதி வட்டி 8 ஆயிரம் செலுத்தி நகையை திருப்பியுள்ளார். மீண்டும் கடந்த 14ம் தேதி நகையை அடமானம் வைக்க அதே வங்கிக்கு சென்றபோது நகையை பரிசோதனை செய்த நகை மதிப்பீட்டாளர் போலி நகை என கூறி, அடமானம் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணிராஜா, குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து மணிராஜா நேற்று காலை வங்கி முன்பு குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றார்.
மணிராஜா கூறுகையில், ‘‘அடகு நகையை திருப்பிய அதே வங்கியில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் அடமானம் வைக்க சென்றபோது போலி என கூறுகின்றனர். அடமானம் வைத்தபோது தங்கமாக இருந்தது. திருப்பி விட்டு மீண்டும் வைத்தபோது போலி என கூறுகின்றனர். எங்களது நகையை மாற்றி விட்டு போலி நகையை வங்கி ஊழியர்கள் கொடுத்துவிட்டனர். இவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
