மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே எல் எண்டத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர முடியாத அளவுக்கு இடையூறாக தவெக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினறனர். தமிழ்நாட்டில் பொது இடங்களில் பேனர்கள், டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் தோரணங்கள் வைப்பது தொடர்பான விதிமுறைகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழக அரசின் அரசாணைகளின்படி மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கவும்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் பேனர் வைக்க வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் பேனர் வைத்தால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும் பேனர்களை வைப்பதற்கு முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எல் எண்டத்தூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து தமிழக வெற்றி கழகம் கட்சியினர் பேனர்களை வைத்துள்ளனர்.
இதனால் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நிழல்குடை நிற்கவும், அமராவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதற்கு காவல் துறையும், உள்ளாட்சித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
