சென்னை: ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், நோட்டா எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு முன் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் அதற்கான படிவம் 49ஓ-வை நிரப்பி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால் ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் 11 அக்டோபர் 2013 முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கொண்டு வரப்பட்டுள்ள நோட்டா (NOTA – None of the Above) என்ற பட்டன் இந்த 49-ஓ விதியின் நீட்சியாகும்,
2013-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரம் தமிழ்நாட்டில் முதன்முதலில் 2013 டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை முதல்முறையாக 2014-ல் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 0.75% நோட்டாவிற்கு கிடைத்தது. ஆனால் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இதற்கான வீதம் குறைந்து, 0.41% வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 1,99,801 பேர் இந்த தேர்தலில் நோட்டாவிற்கு வாக்கு அளித்து உள்ளனர். அதேபோல் தேர்தல் ஆணைய புள்ளிவிவரப்படி கடந்த 3 லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவிற்கு ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014-ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024-ஆம் ஆண்டு தேர்தலின் போது 0.99 சதவீதமாக குறைந்தது.
