பாலக்காடு: கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் நெல்லியாம்பதி செல்லும் மலைப்பாதையில் சூறாவளி காற்றுடன் மழைப்பெய்ததால் சாலையோரத்தில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து வேரோடும் சாய்ந்தன. இதனால், நெம்மாரா-நெல்லியாம்பதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், எலவஞ்சேரி கிராமத்தில் தென்னந்தோப்பில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
