அக்ஷய திருதியை 2026 – தமிழகத்தில் சுமார் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் ரோந்து மாநிலம் முழுவதும் தீவிரமாக இருந்த போதிலும், அக்ஷய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் கடந்த இரு நாட்களில் சுமார் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அக்ஷய திருதியைக்கு தங்க நகைகள் அல்லது தங்கம் வாங்கினால் அதன் பிறகு தங்களிடம் இருக்கும் செல்வம் பல மடங்காக பெருகும் என்பது நம் நாட்டில் இருக்கும் பலகோடி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த தினத்தில் குண்டுமணியளவு தங்கள் வாங்கினால் கூட சிறந்தது என்று மக்கள் கருதுவதால், அக்ஷய திருதியைக்கு நகை கடைகளில் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் மதியம் துவங்கிய அக்ஷய திருதியை, நேற்று மாலை முடிவடைந்தது.

தற்போது1 கிலோ தங்கம் 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே 25,000 கிலோ தங்க நகைகளின் மதிப்பு சுமார் 37,500 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு அக்ஷய திருதியைக்கு, 1 கிலோ தங்கம் விலை 98 லட்சம் ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் விற்ற 25,000 கிலோ தங்க நகைகளின் மதிப்பு, 24,500 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டும் அக்ஷய திருதியை முன்னிட்டு 25,000 கிலோ தங்கம் விற்பனையான நிலையில், இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே அளவு விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் தங்கம் விற்பனையாகி இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட கூடுதலாக 13,000 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தங்கம் விற்பனையாகும் என நகை வியாபாரிகள் எதிர்பார்த்தனர். இதனால் வாடிக்கையாளர்களை கவர பெரும்பாலான நகை கடைகள் பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: