திருப்பூர், ஏப். 20: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பெண்கள் கபடி போட்டி நேற்று நடந்தது.
இதனை கலெக்டர் மனிஷ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மாவட்ட விளையாட்டு அதிகாரி ரகுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
