சென்னை: தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் முயற்சியால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவை இடங்களை அதிகரித்து, அதில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 272 முதல் 273 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸால் இந்தத் திருத்தங்களை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.
தமிழகம் என்பது வீரமிக்க பெண்கள் வாழ்ந்த மண். வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் உள்ளிட்டோர் தமிழகத்தை துடிப்பான மாநிலமாக மாற்ற உழைத்தார்கள். இந்த வீரமிக்க மண்ணின் பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறக்க மாட்டார்கள். இந்த தேர்தல் தமிழகம் மற்றும் டெல்லிக்கு இடையிலான போர் என திமுக கூறியுள்ளது. திமுக, காங்கிரஸ் எப்போதும், வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என நாட்டைப் பிரிக்கவே நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
