×

கேரள அரசின் அனுமதி இல்லாமல் விழிஞ்ஞம் துறைமுக பங்குகளை விற்பனை செய்தாரா அதானி? எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தெரியாமல் விழிஞ்ஞம் துறைமுக பங்குகளை அதானியால் எம்எஸ்சி கப்பல் நிறுவனத்திற்கு எப்படி விற்பனை செய்ய முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். திருவனந்தபுரம் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை கேரள அரசு, அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அதானி குழுமத்திற்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் உள்ளன. கேரள அரசின் அனுமதியின்றி இந்த பங்குகளை அதானி குழுமத்தால் வேறு யாருக்கும் விற்பனை செய்ய முடியாது.

இந்நிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49 சதவீத பங்குகளை எம்எஸ்சி கப்பல் நிறுவனத்திற்கு அதானி குழுமம் விற்பனை செய்யதுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு இடதுசாரி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய கேரள அரசு ஒரு கமிட்டியை நியமித்துள்ளது. இந்நிலையில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

விழிஞ்ஞம் துறைமுகத்தின் பங்குகளை கேரள அரசின் அனுமதி இல்லாமல் விற்பதற்கு அதானி குழுமத்திற்கு எப்படி தைரியம் வந்தது? இதற்கு முதல்வர் வி.டி. சதீசன் கண்டிப்பாக பதில் கூறவேண்டும். விழிஞ்ஞம் துறைமுகத்தில் எம்எஸ்சி நிறுவனம் வந்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரித்து விடும். எனவே அதற்கு கேரள அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பங்குகளை விற்பது தொடர்பான இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் அதானி குழுமத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்தில் மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி 49 சதவீத பங்குகளை அரசின் அனுமதியுடன் மட்டுமே மாற்ற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Adani ,Villijnaam Port ,Kerala government ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,MSC Shipping Company ,Villijnaam International Port ,Adani Group… ,
× RELATED வெனிசுலாவில் மர்மமான முறையில்...