டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பும் போது உடனடியாகக் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என வங்கதேச சட்ட அமைச்சர் அசாத்துசமான் தெரிவித்தார். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா(78). கடந்த 2024ம் ஆண்டு போராட்டத்தால் இந்தியாவுக்கு தப்பி வந்தார். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள நீதிமன்றம் ஹசீனாவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிற்கு திரும்புவதில் உறுதியாக இருப்பதாக ஹசீனா சமீபத்தில் கூறினார்.
பேட்டியில் அவர் கூறுகையில்‘‘நான் கொல்லப்படலாம். நான் கைது செய்யப்படலாம். நான் சிறைக்கு அனுப்பப்படலாம்.என் கதி என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரியும். ஆனாலும், என் மக்கள் என்னை அழைப்பதால் நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்,’’என்றார். ஷேக் ஹசீனா அங்கு உள்ள நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வங்கதேச சட்ட அமைச்சர் அசாத்துசமான் கூறுகையில், ‘வங்கதேச குடிமகளாக இருப்பதால் சட்டத்திற்கு மதிப்பளித்து நாடு திரும்புவதன் மூலம் அவர் சரணடைய நினைத்தால் அவ்வாறு செய்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்படலாம். சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை செயல்படுத்துவோம்’ என்றார்.
