சுற்றுலாத் தலத்திற்கு சென்ற போது ‘நீட்’ மாணவி 3 பேரால் கூட்டு பலாத்காரம்: ஆண் நண்பர் மீது தாக்குதல்

 

சித்ரகூட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாத் தலத்திற்கு சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது 17 வயது நண்பருடன் அப்பகுதியில் உள்ள தேவங்கனா பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்றார். இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு நடந்து சென்றபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து காட்டில் வழிமறித்து தாக்கியுள்ளது.

பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணம் கேட்டு மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. அருண் குமார் சிங் தெரிவித்தார். மேலும், தீவிர விசாரணைக்காக கூடுதல் எஸ்பி மற்றும் சைபர் செல் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைக்காக இரண்டு சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: