புதுடெல்லி: ‘அதிகாரத்தில் இருப்பவர்களின் உத்தரவின் பேரில் நாட்டின் இளைஞர்களைத் தாக்குபவர்கள், ஒருநாள் அரசியலமைப்பின் தடியடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என காங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்கள், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் பவன் கேரா நேற்று எக்ஸ் பதிவில், ‘‘நாட்டின் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட நீண்ட அநீதிகளின் பட்டியலில் நேற்றைய இந்த அவமானகரமான அத்தியாயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் உத்தரவின் பேரில் நாட்டின் மகன்களும் மகள்களும் ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கப்பட்ட ஆளாக்கப்பட்ட தருணம் இது. ஆனாலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் உத்தரவின் பேரில் இன்று நாட்டின் இளைஞர்களை தாக்குபவர்கள், நாளை அரசியலமைப்பின் தடியடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என கூறியிருந்தார்.
மாநிலங்களவை சுயேச்சை எம்பி கபில் சிபல் தனது எக்ஸ் பதிவில், ‘‘அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த போராட்டக்காரர்களிடம் இருந்தே முதலில் கோரிக்கை வந்தது என அமைச்சர் நட்டா கூறுகிறார். என்னவொரு அதிகாரத் திமிர். உண்ணாவிரதம் இருக்கும் நமது குழந்தைகளின் கோரிக்கைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கின்றன. அரசு என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசவும் தடியடி நடத்தவும் காத்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா? வெட்கக்கேடு’’ என கூறி உள்ளார்.
