*மாணவர்கள் எதிர்பார்ப்பு
பட்டிவீரன்பட்டி : சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி கடந்த திமுக ஆட்சியின் போது விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது மாணவ- மாணவிகள் தங்களுக்கு புதிய வகுப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் 5 வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிகள் பூர்த்தியடைந்து 2 மாத காலமாக புதிய வகுப்பறை கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் மாணவர்கள் போதிய வகுப்பறைகள் இன்றி கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
