சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல் 12 குவாரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுற்றுச்சூழலை சீர்குலைப்பது, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டைத் தீமைகளை இழைப்பவை மணல் குவாரிகள் என்பதை அறிந்தும் அவற்றைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பெருந்தொற்று காலத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. 2023-ம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. அவற்றில் 23 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
இத்தகைய சூழலில்தான் 10 முதல் 12 மணல் குவாரிகளை திறக்க அரசு தீர்மானித்து இருப்பதாகவும், அவை பெரும்பாலும் காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் மூலம் செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
முதலாவதாக கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க காவிரி பாசன மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறப்பதுதான் ஒரே வாய்ப்பு அல்ல. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன. இரண்டாவதாக செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும் என்பது சாத்தியமல்ல.
தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள மணல், குவாரிகள் மூலம் பெறப்படும். ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கனஅடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தினமும் 60 ஆயிரம் சரக்குந்து மணல் தேவைப்படுகிறது. அதில் செயற்கை மணல் ஆதாரங்கள் மூலம் 35 ஆயிரம் சரக்குந்து மணல் பெறப்படும் நிலையில், மீதமுள்ள மணல், குவாரிகள் மூலம் பெறப்படும். ஒவ்வொரு சரக்குந்திலும் தலா 100 கனஅடி கொண்ட 3 யூனிட் மணலை சராசரியாக ஏற்ற முடியும். அதன்படி புதிதாக திறக்கப்படும் ஒவ்வொரு மணல் குவாரியிலிருந்தும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,083 சரக்குந்துகளில் மணல் அள்ளப்படும். ஓராண்டுக்கு சுமார் 2.74 கோடி யூனிட் மணல் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும். இந்த சூழலியல் சீரழிவை சரி செய்யவே முடியாது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதைத் தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டுள்ள மணல் குவாரிகள் திறக்கப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது. 12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 5 கி.மீட்டருக்கு ஓரிடத்தில் தடுப்பணைகளைக் கட்டவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
