கோவை, ஜூன் 25: கோவையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பெற்றோர் ஆசிரியர் கழக (பிடிஏ) கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டிற்கு என சேர்த்து பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணமாக அரசு ரூ.160 நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து ரூ.1000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் காரணமாக மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். கோவை அரசு கலைக்கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என அனைத்து கல்லூரிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
