வத்திராயிருப்பு, ஜூன் 22: வத்திராயிருப்பு வட்டம் தாணிப்பாறை ராம்கோ நகரை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சுகபுத்ரா, பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது: குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும்.
இப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்று, முன்னேறும் வகையில் ஒரு குழு அமைத்து செயல்பட வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்கள் உரிய சிகிச்சைகளை பெற வேண்டும். மருத்துவர்கள் அறிவுரையை முறையாக பின்பற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளிலேயே மகப்பேறு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவத்தார். அதனைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்ட கலெக்டர், அதில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட கலெக்டர், முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்து, அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
