கரூர், ஜூன் 24: போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்தி வாய்ந்த சமூக மாற்றக் கருவியாக கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து. சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கம். போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான. நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.
வரும் ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “START RUN, STOP DRUGS” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் வரும் 26.06.2026 காலை 06.00 மணிக்கு தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் துவங்கி திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டானா முன்பு சென்று மீண்டும் திரும்பி மாவட்ட ஆட்சியரகம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைகிறது.
சுமார் 5 கி.மீட்டர் தூரம் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மேலும், ஓட்டத்தில் கலந்து கொள்ள பதிவு செய்யும் முதல் 500 நபர்களுக்கு டிஷர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் 14 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது பெயர் விவரங்களை https://forms.gle/pyphjRMqEqMXbujy7 என்கிற கூகுள் பார்மிலோ அல்லது தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலக இ-மெயில் dsokarur@gmail.com அல்லது தொடர்பு எண் 04324-299826 அல்லது 7401703493 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
