ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி காவல் ஆணையரிடம் மனு: கணவரின் உயிருக்கு ஆபத்து என புகார்

ஆவடி: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி திருவேங்கடம் என்ற குற்றவாளி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் 5 நாட்களுக்கு காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் வழக்கறிஞர் அருளை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவடி காவல் ஆணையத்தில் அருளின் மனைவி அபிராமி தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நேற்று புகார் மனு அளித்தார். அப்போது, நிருபர்களை சந்தித்து கூறுகையில், தனது கணவர் ஏற்கனவே 5 நாட்களுக்கு காவல் எடுத்தபோது அவர் அனைத்து உண்மைகளும் கூறிவிட்டார். எனது கணவர் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கலாம். ஆனால் அவரது உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது. தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என கூறினார்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி காவல் ஆணையரிடம் மனு: கணவரின் உயிருக்கு ஆபத்து என புகார் appeared first on Dinakaran.

Related Stories: