வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார் நடிகர் தனுஷ்

சென்னை: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 10 நாட்களை கடந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 150க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 1968 பேர் 16 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு தரப்பினர் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இன்று காலை செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

The post வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார் நடிகர் தனுஷ் appeared first on Dinakaran.

Related Stories: