×

இளம்பெண்ணை ராடால் தாக்கி செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

செங்கல்பட்டு: இளம்பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிபுரம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா (29). இவர், செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றார். நேற்று முன்தினம் 12 மணியளவில் பேருந்து மூலம் மகேந்திரா சிட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, தனது அறைக்கு செல்ல மகேந்திரா சிட்டி முதல் அவென்யூ பகுதியில் நடந்து சென்றார். அப்போது, டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் கீர்த்தனாவை மடக்கி செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர். ஆனால், அவர் தர மறுக்கவே, இரும்பு ராடால் அவரை தாக்கி, கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதில், பலத்த காயம் அடைந்த கீர்த்தனாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post இளம்பெண்ணை ராடால் தாக்கி செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Devipuram ,Idukki district, Kerala ,
× RELATED அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு