வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக பட்டாம்பி ஆற்றின் பாலத்தின் தார் டிரம்கள் அடுக்கி வைப்பு

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்து வந்த மழை காரணமாக பட்டாம்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியதில் பட்டாம்பி பாலத்தின் இரண்டு புறங்களிலுள்ள தடுப்புகள் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. தற்போது பட்டாம்பி ஆற்றுப்பாலத்தில் இருபுறங்களிலும் கைவரிசை தடுப்புக்கு பதிலாக டார் டின்கள் பாதுகாப்பாக அமைத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது குருவாயூர், குன்னம்குளம் பொன்னாணி, திருச்சூர் ஆகிய இடங்களிலிருந்து வருகின்ற வாகனங்கள் பட்டாம்பி பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக ஒத்தப்பாலம், பட்டாம்பி, பாலக்காடு, வளாஞ்சேரி, மலப்புரம் ஆகிய இடங்களிலிருந்து செல்கின்ற வாகனங்கள் வெள்ளியாங்கல் பாலத்தின் வழியே அனுமதிக்கப் படுகிறது. பட்டாம்பி பாலத்தின் தடுப்புகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனப் போக்குவரத்து சிலநாட்கள் தடை செய்யப்பட்டது.

தற்போது பொதுமக்களின் வசதிக்காக ஒருபுற வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு குருவாயூர், குன்னம்குளம், பொன்னாணி, திருச்சூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற வாகனங்களை மட்டுமே பட்டாம்பி பாலத்தின் வழியாக அனுமதிக்கின்றனர். ஆற்றில் மழைவெள்ளம் நீரொழுக்குக் குறைந்தவுடன் பாலத்தின் மீதுள்ள கைவரிசைகள் சீர் செய்யப்படவுள்ளது என பொதுப்பணித்துறை பொறியாளர் அறிவித்துள்ளார். வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச வேகத்தில் மட்டுமே செல்லுமாறு டிரைவர்களிடம் போலீசார் அறிவுரை வழங்கிய பின் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

இப்போதும் பாலத்தின் அடியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியவாறு உள்ளது. இதனால் மீன் பிடிக்க வேண்டாம் என்றும், ஆற்றில் குதித்து விளையாட வேண்டாம், ஆற்றில் மணல் எடுக்க வேண்டாம் என உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகைளை நிறுவி உள்ளது. படகுகளில் ஆற்றை கடந்து செல்லவேண்டாம் என எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக பட்டாம்பி ஆற்றின் பாலத்தின் தார் டிரம்கள் அடுக்கி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: