×

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் சென்னையில் சில இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இது தவிர 13 மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இரவு 10 மணி வரை மழை பெய்தது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் நேற்று 101 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி மற்றும் அதற்கும் கீழே வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல, 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மத்திய மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மேற்கண்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Center ,North Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன...