தனியார் வெடி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், திருவாலங்காடு கிராமத்திலுள்ள தனியார் வெடி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாலங்காடு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான வெடி உற்பத்தி மையத்தில் பிற்பகல் சுமார் 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருவாவடுதுறை கிராமம், மேலப் புதுத்தெருவைச் சேர்ந்த கர்ணன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த லட்சுமணன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கலியபெருமாள் மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தனியார் வெடி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: